செவ்வாய், 27 செப்டம்பர், 2011

வடு


நீ
நெருப்பைவிட
அழகானவள்...
கண்ணீரைவிட
ஆழமானவள்...

கவிதையை விட
கவின் மிகுந்தவள்
காதலைவிட
கனவு விதைப்பவள்...

பூ
பூக்கிறது
மணம் கமழ்கிறது....
வாழ்க்கை...

நீ
பூக்கிறாய் என்
மனம் கலைகிறது...
காதல்...

என்
நீர்த்துப்போன
நினைவுகளில் கூட
பூரித்துப்போய் உன்
நினைவு...

என்
முகவரிக்குள்
நுழைந்த உன்
'முக' வரியால்
காயமடைந்தேன்...

அகவரிகள் உன்
வனப்பில் வழியிழந்து...
விதியிழந்து
சுகவரிக்குள் மூழ்கி
சின்னாபின்னமாயின...

உன்
பல்வரிசையழகில் - என்
பல்நோக்கு முடக்கப்பட்டு
நல்நோக்குகள் அனைத்தும்
முள்நோக்காய்ப் போனது...

இப்படி உன்
'கைவரி'சையில் சிக்கி - என்
கைவரிகள் கர்வமின்றி
அழிந்துபோயின....

வரிகளைத் தொலைத்து
முகவரியற்றுத் தவிக்கிறது
இந்தக் கவிதை
என்னைப்போலவே...

வசந்தகாலத்தை
நினைந்துருகி
வாழும்காலம்
அணைந்து போனது...

பசுமைகளைக்
கொன்றுதின்னும்
இலையுதிர்க்காலமாய்
இன்றும் நாளையும்....

ஏக்கச் சருகுகளுடன்
தூக்கம் தொலைந்த என்
எதிர்காலம்
பூக்க மறுத்த உன்
புதிர்காலம்...

வேதனையையும்
கண்ணீரையும்
மட்டுமே அறிந்து
வெம்பிப் போயிருக்கிறது
என் கவிதை....

முடிந்துபோன நேற்றைய
பொழுதைப்போலவே
வடிந்துபோன நீராய் என்
வாழ்க்கை
நொடிந்துபோனது....

இன்னமும் இந்த
அற்ப உயிரின்
ஆறாத காயமாய்
உன் வடு...

திங்கள், 12 செப்டம்பர், 2011

தத்துவம்..


வார்த்தைகள் கண்ணீர்விட்டுக்
கதறியழும்போதுதான்
கவிதை பிறக்கிறது...

எந்த நெறிமுறைக்குள்ளும்
சிக்காமல்
எல்லா நெறிமுறைகளையும்
சிக்கலாக்கிவிட்டிருக்கிறது காதல்..

இதோ....
என் பாதையெங்கும்
அகலமறுக்கும் முள் மெத்தைகள்...
பதுங்கு குழிகளெனப்
பதுமையின் நினைவுகள்...

கனவு, கவிதை,
நினைவு, நிஜம்,
புனைவு, புதுமையென
சுமந்தும், சுவைத்தும்
துன்புற்றும், இன்புற்றும்
மகிழ்கிறது காதல்...

அதோ..
கண்ணெதிரே நீ நடந்து வரும்
அந்த அரூபப் பாதையில்தான்
சிந்தப்பட்டிருக்கின்றன....
மெல்லிய உன் பாதத்தை வருடியபடி
பரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன...
இந்த வாழ்க்கைக்கான தத்துவங்கள்...

வாழ்வின்
வெவ்வேறு திசைகளில் தோன்றிய
வெவ்வேறு தத்துவங்களின் சாராம்சமாய்ப்
பொலி(ழி)ந்து தள்ளுகிறது காதல்...

தெளிவாக நுகரமுடிகிறது...
என் வாழ்க்கைக்கான
உன்னத தத்துவம் நீ...!
எவர் மனதும் புண்படாத
அழகிய தத்துவம் காதல்...!

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

நாணம்...

ஆழமான என்
நினைவுப் பள்ளங்களில்
உன்னைச்
சேமித்து வைத்திருக்கிறது காதல்...

காதல் மகரந்தத்தைத்
தட்டிப்பறிக்கவென்றே
வண்டாய் ரீங்காரமிடுகின்றன
உன் விழிகள்...

புன்னகைக்கும் இமைகள்
படபடத்தபடி
விழிகளாலேயே பேசிவிடுகிறாய்...

நீ அறிந்தே இருக்கிறாய்...
பேசுவதற்காகவோ..
புன்னகைக்கவோ அல்ல...
முத்தமிட்டுக்கொள்ளவே
இதழ்கள் படைக்கப்பட்டிருக்கின்றன...

காதல் ஒரு 
வெட்கமற்ற மழை....
இடம், பொருள், ஏவலின்றி
இதயத்தை உந்தித் தொலைக்கிறது...
ஆனால் நீயோ
வெட்கமழையில்
முகம்மூட முனைகின்றாய்...

இனி நீ
எதைத்தான் மறைக்கமுடியும்...?
காதலைத்தான் அந்தக்
கருவண்டுகள் ரீங்காரமிட்டுவிட்டனவே....!

என் வாழ்நாளின்
இறுதிக்காலம் வரை நீ
என்பதை என்னால்
அறுதியிட்டுக்கூற முடியும்...

ஏனென்றால்
முற்றுப்பெறவே முடியாத
வார்த்தைகளை உள்ளடக்கிய
கவிதை நீ..........

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பிழை..




துவட்டிக்கொள்ளவியலாதபடி

முழுக்க நனைகிறது இதயம்..

பளீரென பிளக்கும் உன்

பார்வை மின்னல்கள்..

கண்டபடி ரசித்துச் சிரிக்கும்

இந்த காதல் மழை..

உன்னுள் நனைந்தபடி

தப்பிப் பிழைக்கும் இந்த

பாழும் உயிர்...



வெண்பா... :

மின்னலைக் கண்டஞ்சா மாவீரர் பேரெழில்

மின்னலைக் கண்டஞ்சல் காண்....



மின்னலுக் கஞ்சா திதயம் மிரளுமே

மின்னலைப் பார்வை கண்டு..

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

வானிலை...

திசைக்கொன்றாய்ப்
பறக்கும் என்
நினைவுப்பள்ளங்களில்
ஆழ்குழிகளாய் உன்
நினைவலைகள்...
என் வான வீதியில்...
 
நீ
சிறிது விலகினால்க்கூட
என்னுள்
குறைந்த காற்றழுத்த
தாழ்வுமண்டலம்
உருவாகிவிடுகிறது...
 
சிலநேரம்
உனைக்கண்ட
பெருமிதத்தில்
தூறலாய்க் கொட்டுகிறது..
 
பலநேரம்
உன்னை நோக்கி
நகரமுற்பட்டு
இயலாமையால்
கண்ணீர்த் தூவுகிறது...
 
சிலநேரம் கோபத்தில்
அனலைக் கக்குகிறாய்..
புயலென உருவெடுக்கிறது...

சிலநேரம் 
இன்பப்புன்முறுவலில்
வாறியணைக்கிறாய்...
தணிந்துபோகிறது தாகம்...

உன் வருகை
அரிதான நேரத்தில்
வறண்டுபோய்ப்
புள்ளியடித்துக்
கானலாகிறது
இந்தப்பாலை...
 
வெப்பத் தகிப்பில்
வழியற்று விழிபிதுங்கும்
நிலத்தின் தேவையறிந்து
மழை வருவதில்லை...
நீயும் அப்படித்தான்...
 
அந்தப் பாதையோரத்
திருப்பத்தில் ஒரு
தாவணிச்சரிகை தெரிகிறது...
அது நீயாயிருக்கக் கூடுமென
உந்தித் தொலைகிறது மனம்...
 
அருகில் பட்டாம்பூச்சியொன்று
மென்மையாகத் தொட்டுவிட்டுப்
பறக்கிறது...
அதுவும் நீயோ....?
 
மழையென நீ
வருவாய் என
எண்ணித்தான்
உயிர்த்திருக்கிறது மனம்....
காத்திருக்கிறது தினம்...
 
வானிலை அறிக்கை
போன்றது உன் வருகை..
நீ வரக்கூடும்....
மென்மையாய் என்னைத்
தீண்டக்கூடும்...

வியாழன், 21 ஜனவரி, 2010

பரிசு

உன்னைச்
சிந்திக்கச் சிந்திக்கத்
தித்திக்கிறது வாழ்க்கை...
என் வாழ்நாளின்
மிகக் குறுகிய
வினாடிகளைச்
சுமந்துவந்தவள் நீ...
உன்னைப்போய்
வாழ்நாள் முழுக்க
சுமந்து தொலைக்கிறது
இதயம்...
அந்த மழைக்கால
நாட்களில் நான்
உன்னோடு பின்னியிருந்த
சிற்சில மணித்துளிகள்
கண்களின்
பனித்துளிகள் போல
என் ஒவ்வொரு
இரவிலும் விடியும்வரை
பொழிந்து கொல்கிறது...
முத்தமிடத் துடிக்கும்
தாக இதழ்களுடன்
உன் ஸ்பரிசத்தின்
மோக அரவணைப்பில்
சிக்கித் தவித்த
வினாடிகள்...
தித்திக்கும் அந்த
நினைவுகளின்
சோக அரவணைப்பில்
தனிமையாய் நான்...
என் வறண்ட
தனிமையில்
உன் நினைவுகளைத்
தூறலாக்கி
மகிழ்கிறது மனம்...
மழைக்கென ஏங்கிச்
சுடுமூச்சு விட்டபடி
காய்ந்து கிடக்கும்
நிலம்
திடீரென பூரித்து
வாய்பிழப்பதுபோல்
உன் நினைவுகள்.....
இது பரிசா....?
தண்டனையா...?
தனிமையில்
வாடிக்கிடக்கும் மனம்
உன் நினைவுகளைப்
பரிசாகவே
ஏற்றுக்கொண்டு
ஆற்றிக்கொள்கின்றன...

வெள்ளி, 25 டிசம்பர், 2009

மொ(மு)த்த காதலும்......



உன்னை நினைத்தாலே
என்னுள் துளிர்க்கிறது
துள்ளலுடன் மகிழ்ச்சி...
மனதில் பெய்கிறது மழை...

அந்திமப்பொழுதின்
அர்த்தமிகு வெளிச்சத்தில்
அந்த மலைச்சாரலில்
சிறு மழைத்தூரல்...

நடந்து செல்கிறோம் நாம்
கடந்து செல்கிறோம்
சிலப்பல நூற்றாண்டுகளை....
உடைந்த நிலாவும்

ஒட்டாத சூரியனும்
முட்டாது நின்ற
மாலையில்
சிட்டாகப்பறக்கிறது
நம் சிறகுகள்....

சுதந்திரம் இன்னதென்று
சாலையில் போதித்தது
தந்திரத்துடன் மழைத்துளி....

இதுவரை நான் உன்னைத்
தீண்டியதில்லை - ஆனால்
நீ என்னைப்
பலமுறை தொட்டுப்பார்த்திருக்கிறாய்....

வானில் மின்னல்
மழை...
மனதில் மின்னல்
காதல்...

மின்னல் போல
பளீரிடுகிறாய்... உன்
பேரழகில் உறைந்து
வெளிரிப்போய் என் சருமம்....

சொட்டும் மழையில்
இதழ் சொட்டும் ஈரத்தில்
மூர்ச்சையாகிப்போனது
நான்தான்...

செவ்வாய்க்கிரகத்தில்
குடியேறுகிறது காதல்...
உன்
செவ்வாய்...?! கிறக்கத்தில்
அஸ்தமிக்கிறது
என் சூரியன்...

மொத்த காதலையும்
அள்ளித்தெளிக்கிறாய்...
முத்தம் கேட்ட வினாடிகளில்
மூச்சொறிந்து வெட்கத்தில்
இதழ்குவித்து
சத்தமின்றிப் புதைக்கிறாய்....
என் இதயத்தைப்
புதைகிறாய்....

மழையுடன்
மகிழ்ச்சியில் திளைந்த
அந்த மாலை...
இப்போது
விழிகளில் மழையுடன்...

உன் பிரிவு
ஏக்கத்தைக் கொடுக்கிறது...
என்
தூக்கத்தைக் கெடுக்கிறது....

மழை....
காதலை மட்டுமல்ல
கண்ணீரையும்
உலகுக்கு உரைக்கும்
கனல்......