வெள்ளி, 13 நவம்பர், 2009

நெருப்பு





கருகிக்கொண்டிருக்கும் விட்டிலை
விளக்கு அறிவதில்லை...
உருகிக்கொண்டிருக்கும் 
இந்த இதயத்தை
உருக்கிக்கொண்டிருக்கும் நீ
அறியாததில் வியப்பொன்றுமில்லை...
 
உதடுகள்
மொழியாவிட்டால் என்ன?
உன் விழிகளே
மொழிகளைப்
படைக்கின்றன...
நேற்றோ நாளையோ
எப்போதாவதுதான் நீ
வருகிறாய்...
மின்னல் போல...
கண்டு மகிழ்கிறேன் ...
 
வரும்போது பார்வையாலேயே
நெருப்பை பொழிகிறாய்..
உளம் உருக நனைகிறேன்...
 
உன் சீற்றம்
விசித்திரமானது - அது
சுடு நெருப்பினால்
குளிரூட்டப்பட்ட
காதல் பரிசு...
 
கனல் கக்கும்
விழிகள் கண்டு
தணலாகிறது மனது...
 
ஏனோ..
நீ நெருப்பெனினும்
உன் பொழிதலுக்கு ஏங்கி
பட்டுப்போகக் காத்திருக்கும்
பயிரென நான்...
 
நீ
உமிழ்வது நெருப்பெனினும்
நனைவது காதல்...
 
இந்தக்
காதல் நெருப்பு
தொடர் மழையை விடக்
கோரமானது...
 
இதயம் முழுக்க
நனைந்து கருகுகிறது
உன் நெருப்பு மழை
தீண்டிய சுவடுகளாய்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக